×

காரல் மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்!

சென்னை: புரட்சியாளர் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; “சென்னை, மயிலாப்பூரில் நேற்று (30.07.2023) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆர்.என்.ரவி புரட்சியாளர் காரல் மார்க்ஸ் குறித்து விஷத்தை கக்கியுள்ளார். புரட்சியாளர் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாமேதை காரல் மார்க்ஸ் அவர் தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதரிகளான சோபியா மற்றும் எமிலி இவர்களுடன் தான் வாழ்ந்து வந்துள்ளார். காரல் மார்க்ஸ் பெரிய சித்தாந்தவாதியாகவும், தத்துவ வாதியாகவும் பின்னாளில் அறியப்பட்டாலும், முதலில் கவிஞராகத்தான் தன் வாழ்க்கையை தொடங்கியவர்.

ஜென்னி என்ற பெண்ணை காதலித்து மணந்தவர். 38 ஆண்டுகள் மிகச்சிறந்த முறையில், மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். பொருளாதார ரீதியில் துயருற்ற போதும், அவரது குடும்பத்தினர் மீது அன்பு கொண்டு கடைசிவரை அவர்களை விட்டு பிரியாமல் இருந்தவர். பிரதமர் மோடி போன்று அவர் குடும்பதை விட்டு பிரிந்து விடவில்லை.

புரட்சியாளர் காரல் மார்க்ஸுக்கு இடது கை அவருடைய மனைவி ஜென்னியாக இருந்தால், அவருடைய வலது கையாக அவருடைய ஆருயிர் நண்பர் ஏங்கல்சும் இருந்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்துதான் அவரை இயக்கினார்கள். 1881ம் ஆண்டு, டிசம்பர் மாதம் அவர் மனைவி ஜென்னி உயிர் பிரிந்த பின், அவரின் ஆவி பிரிந்து விட்டது என்றும், ஒரு நடைப்பிணம் போல்தான் அவர் வாழ்ந்தார் என்றும் அவருடைய நண்பர் ஏங்கல்சு கூறுயள்ளார்.

அதற்குபின், 1883ம் ஆண்டு மார்ச் 14ம் அன்று மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி தன்னுயிரை துறந்தார். இந்திய அரசியல் அமைப்பை பற்றித்தான் ஆளுநருக்கு தெரியாது என்றால் மேற்கத்திய அறிஞர்களின் வாழ்க்கை வரலாறும் ஆளுநருக்கு தெரியாது போலும்.

மேலும், புரட்சியாளர் காரல் மார்க்ஸ் தனது இளமை காலத்தில் இருந்த போது, ஜெர்மானிய தத்துவஞானி ஹெகல் என்பவர் புகழ் பெற்று விளங்கினார். கடவுள் குறித்த கேள்விக்கு, “உலகத்தை உருவாக்கியதில் கடவுளுக்கு ஒரு பங்கு இருக்கிறது என்றும், அதை நிர்வகிக்க ஒரு மகத்தான சக்தியின் மூலம், இந்த உலகை ஆள வைக்கின்றார் என்றும், அந்த சக்திதான் நாட்டின் மன்னர் என்றும் கூறினார்”.

நாட்டை ஆளும் மன்னர்கள் செய்யக்கூடிய எதையும் கேள்விக் கேட்கக் கூடாது என்றும், அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் கடவுளின் முடிவு என்று பொருள்படும்படி அவரின் பதில் இருந்தது. அதன்பின் ஹெகலை ஆட்சியாளர்கள் கொண்டாடினார்கள். இன்று, ஹெகலின் கூற்றுப்படிதான் நம் நாட்டின் ஆட்சியாளர்கள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஹெகலின் கூற்றுக்கு முற்றிலும் முரண்பட்டார் மாமேதை காரல் மார்க்ஸ். இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டதல்ல. கடவுள் என்பதே ஒரு கற்பனை. அந்த கற்பனை எப்படி நிறுவனமயம் ஆனது எவ்வாறு என்று பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். அதன்பின், அவர் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கினார்.

மேலும், மதம் மனிதனுக்கு அபின் என்று கூறினார் மாமேதை காரல் மார்க்ஸ். தத்துவஞானி ஹெகலுடன் முரண்பட்டதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் காரல் மார்க்ஸ் மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கின்றாரா? ஹிட்லரின் பாசிச சிந்தாந்தங்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள் இயல்பாகவே யூதர்களை வெறுப்பார்கள். காரல் மார்க்ஸ் ஒரு யூதராகப் பிறந்தவர் என்ற காரணத்தினால் அவர் மீது விமர்சனம் வைக்கின்றாரா?
மாமேதை காரல் மார்க்ஸ், ஜாதியையும் தீண்டாமையையும் நிலப்பிரபுத்துவ-வர்ணாசிரமக் கோட்பாடுகளையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர்.

அதனால்தான், பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போல காரல் மார்க்ஸும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்குக் கசப்பாக இருக்கிறது போலும். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்து, தமிழ்நாட்டின் அரசியல் மாண்புகளைச் சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதுதான் உண்மை. இவரது சிந்தனை தமிழ்நாட்டைச் சிதைக்க முயற்சி செய்கிறது. இதனை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை என்பதுதான் பேருண்மை” என தெரிவித்துள்ளார்.

The post காரல் மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Governor R. ,Karal Marx ,N.N. ,Tamil Nadu Assembly Congress ,Velvaperunthai ,Ravi ,Chennai ,Governor R. N.N. ,Dinakaran ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...